Monday, July 28, 2008

தமிழ் இளைஞரின் தமிழறிவின்மை - ம.இலெ.தங்கப்பா

இன்று மேனிலைப் பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் தேர்ச்சிபெற்று வெளியே வரும் தமிழ் இளைஞர்களின் தமிழ்மொழி அறிவும் தமிழிலக்கிய அறிவும் மிகமிகக் கீழ் நிலையிலேயே உள்ளன. அவர்கள் என்ன பாடங்களை வேண்டுமானாலும் படிக்கட்டும்; ஆனால் சொந்தத் தாய்மொழியைப் பிழை யில்லாமல் எழுத அவர்கட்குத் தெரிந்திருக்க வேண்டும். தங்கள் முன்னோர்களின் இலக்கியங்களைப் பற்றியும் அவர்கட்கு அடிப்படை அறிவாவது கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். இது மிகமிக அடிப்படை யான கல்வியாகும்.

தங்கள் சொந்த மொழியைப் பிழையற எழுதப்படிக்கத் தெரியாமலிருப்பதும், தங்கள் இலக்கியம் பண்பாடு பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமலிருப்பதும் எவ்வளவு வெட்கப்படத்தக்க நிலை என்பதைக்கூட அவர்கள் உணராமலிருக்கின்றனர்.

ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பது கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும். அது ஒரு புறம் இருக்கட்டும். நடப்பு நிலையில் இன்றும் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்து வருகின்றது. மேலும் ஆங்கிலம் ஒரு கட்டாயப் பாடமாகவும் கற்பிக்கப்பட்டுவருகின்றது. ஆனால் இந்த இரண்டையும் தலைக்கீடாகக் கொண்டு தமிழ் மாணவர்க்குப் போதிய தமிழறிவு வழங்கப்படாதிருப்பது சற்றும் பொருந்தாதது மட்டுமன்று. மிகவும் நாணத் தக்கதுமாகும்.

வெள்ளையன் ஆண்டகாலத்தில் கூட, வெள்ளையனின் கல்விமுறைக்கு நாம் அடிமையாக இருந்தபொழுது கூட, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி மாணவர்களின் தமிழறிவும் தமிழ் இலக்கிய அறிவும் மிகமிக உயர்ந்த நிலையில் இருந்தன என்பது இன்று எழுபது அகவை தாண்டியிருக்கும் பலரும் தங்கள் சொந்தப் பட்டறிவினால் தெரிந்து கூறும் செய்தியாகும்.

அப்படியிருக்கத் தமிழரைத் தமிழரே ஆளும் இன்றையச் சூழ்நிலையில் தமிழ்க்கல்வி மிக மிக மட்டமாகப் போயிருப்பது ஏன்? இத்தகைய இழிநிலைக்கு யார் பொறுப்பு? இன்றைய ஆட்சியாளரும் கல்வியாளருமே பொறுப்பு என்பதை யார் மறுக்க முடியும்?

மேற்கூறிய இருசாராருக்குமே தமிழ்க்கல்வியில் சிறிதளவும் அக்கறையில்லை. தமிழிலக்கியத்திலும் பண்பாட்டிலும் கடுகளவு ஈடுபாடும் அவர்கட்கு இல்லை: கல்வி என்றால் என்ன என்பதே இவர்கட்குத் தெரியவில்லை.

வெள்ளைக்காரன் காலத்தில், ஆட்சி அலுவலகங்களில் அலுவலர்களாகவும் எழுத்தர்களாகவும் அலுவல் பார்க்க ஆங்கிலமறிந்தவர்கள் தேவை என்பதற்காகத்தான் மெக்காலே கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அலுவல் பார்ப்பது கல்வியின் ஒரு நோக்கமாக இருந்தாலும் கூட, முழுக்கல்வியும் அந்த வழியிலேயே போய்விடவில்லை. ஏட்டுக்கல்வியோடு கூடப் பண்பாட்டுக் கல்வியும் ஒழுக்கக் கல்வியும் குழைத்தூட்டப்பட்டன. வெள்ளைக்காரன் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தான். அதனால் அவன் அமைத்த பாடத்திட்டத்தில் தாய்மொழிக் கல்விக்கும் தாய்மொழி இலக்கியக் கல்விக்கும் போதிய இடம் வழங்கப்பட்டிருந்தது. படித்துவந்த இளைஞர்கள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டிருந்தபோதிலும், ஆங்கில மொழியைக் கட்டாய மொழியாகக் கற்றுவந்த போதிலும் தமிழையும் அவர்கள் ஆர்வத்துடன் கற்றனர். தமிழ்மீது தங்கள் தாய்மொழி என்ற மதிப்பு அவர்கட்கு இருந்தது. தமிழாசிரியர்களும் மிகுந்த ஆர்வத்தோடும் அக்கறையோடும் தமிழைக் கற்பித்தனர். தமிழ் இலக்கிய ஆர்வத்தை மாணவர்கட்கு ஊட்டினர். தங்கள் பண்பாட்டுச் செழுமையை இளைஞர்களுக்கு உணத்தினர்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. வெள்ளைக்காரன் காலத்தில் இருத்ததைவிட இன்று பலருக்கு ஆங்கில வெறி தலைக்கேறி உள்ளது. ஆங்கில மொழியின் தேவை பயன்பாடு பற்றிய தவறான பார்வை, குருட்டுத் தனமான ஆங்கிலப்பற்று, தாய்மொழியாகிய தமிழ் பற்றிய புறக்கணிப்புணர்வு முதலியன மிகுந்துள்ளன. பண்பாட்டைப்பற்றியோ ஒழுக்கத்தைப்பற்றியோ நம் ஆட்சியாளரும் சரி, அவர்கட்கு வால் குழைக்கும் கல்வியாளரும் சரி கடுகளவும் அக்கறை கொள்ளவில்லை. அன்று கல்வியின் ஒரு பகுதியாக இருந்த வேலைவாய்ப்பு நோக்கம் இன்று பலமடங்கு பெருகிக் கல்வியின் நோக்கமே அலுவல் பார்ப்பதுதான் என்ற உணர்வு இளைஞரிடம் தலைதூக்கியிருக்கின்றது.

அன்று அலுவல் பார்த்தவர்கள் தங்கள் வாழ்க்கைத் தொழிலாக அதனை மேற்கொண்டிருந்தனர். பொருளீட்டுதல் ஊதியம் பெறுதல் என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக மட்டுமே இருந்தது.

இன்று அளவுமீறிய பொருள் வெறி இளைஞரைப் பிடித்தாட்டத் தொடங்கிவிட்டது. அன்று வாழ்க்கையை நன்கு வாழ்வதற்குப் பொருள் தேவை என்று மக்கள் கருதினர். வாழ்க்கைக்காகப் பொருள்ஈட்டல் என்ற நிலை அன்றிருந்தது. இன்றோ பொருள் ஈட்டுதலுக்காகவே வாழ்க்கை என்ற பிழைக்கோட்பாடு எல்லோரையும் பிடித்தாட்டத் தொங்கிவிட்டது.

கடுகளவு அரசியல் அறிவும் மக்கள் நேயமும் அற்றபொருட் குறிக்கயவர்களே அரசியலில் புகுந்து ஆட்சியாளராகி விடுவதால் பொருட் குறிக் கல்வியையே அவர்கள் முன்வைக்கின்றனர். பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்றபடி, கல்வியாளரும் இப்போலிக் கல்வியையே இளைஞர்க்கு வழங்கு கின்றனர். தாய்மொழி அறிவை வளர்க்க இவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. இலக்கியம், பண்பாடு, மக்களன்பு பிற நல்லியல்புகள் எவை பற்றியும் கல்வித்திட்டங்கள் கவலைப்படுவதில்லை. தாய்மொழிக் கல்வி தேவையற்ற ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் விளைவாகத்தான் தமிழ் இளைஞன் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் அடிப்படை அறிவுகூட இல்லாமலேயே கல்லூரியைவிட்டு வெளியே வருகின்றான்.

http://www.thelithamizh.com/headings.html

0 comments: