Thursday, October 2, 2008

தமிழிசை - அன்றும் இன்றும் - முனைவர் இரா. திருமுருகன்

தெலுங்கிசைத்தால் மறுப்பீர்கள் தமிழே பாடச் செய்யுங்கள் அதற்காகத் திரண்டெழுங்கள்! இலங்குதமிழ் மொழியினிலே பாடல் இல்லை எனஉரைத்தால் அறையுங்கள்! (எது இசை?) என்று பாடினார் பாவேந்தர்.

விலையில்லாப் பெருமைபல உடையதேனும் விளங்காத மொழியினிலே பாட்டைக்கேட்டுத் தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட்டாலும் தனக்கதுவோர் கலையின்பம் தருவதுண்டோ?

என்று பாடினார் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. என்றாலும் இன்றுவரையில் தெலுங்கில் பாடும் வழக்கமே இருந்துவருகிறது.

வரலாற்றுக் கெட்டாத தொன்மைக்காலத்தில் தோன்றி வளர்ந்துவந்த தமிழிசைக்கு கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வடநாட்டுச் சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரம் தான் இலக்கணநூல் என்றும், 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இருந்த தியாகராசர் (1767-1847), சியாமா சாத்திரி (1762-1827), முத்துசாமி தீட்சிதர் (1776 - 1835) ஆகியோர்தாம் முதன்முதல் கர்நாடக சங்கீதம் பாடிய சங்கீத மும்மூர்த்திகள் என்றும் சிலர் அறியாமையாலோ, வேண்டுமென்றோ கூறிவருகின்றனர். இவர்களுக்கு முன்பு 4ஆம் நூற்றாண்டுகளில் பண்ணிசை பாடிய காரைக்காலம்மையார், 7, 8ஆம் நூற்றாண்டுகளில் தமிழிசை பாடிய முத்துத்தாண்டவர் (1560-1640), மாரிமுத்தா பிள்ளை (1712 -1787), அருணாசலக் கவிராயர் (1711-1779) ஆகியோரை அறிந்தவர்களும் மறைக்கின்றனர். சில இனத்தார் இசைக்கலைக்குத் தாமே உரியவர்கள் என்று சொந்தங் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க

மக்கள் தொண்டர்கள் ஆட்சியைக் கைப்பற்றுக - ம. இலெ.தங்கப்பா

இந்த நாட்டில் பெரும்பாலான அரசியல் வாணர்கள் நேர்மையாளர்கள் அல்லர். தொண்டு நோக்கத்தோடு அரசியலுக்கு வந்தவர்களும் அல்லர். எந்த ஒழுங்கு முறையும் இல்லாத இந்தச் செயற்கை நாட்டில் அரசியல் என்பது நேர்மையில்லா வழிகளில் பொருள் ஈட்டுவதற்கான ஒரு தொழில். தண்டனை கிடைக்காது என்ற நம்பிக்கையில் குற்றங்கள் செய்வதற்கான ஒரு வாய்ப்பு. அதிகாரத்தினால் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையம் பயன்படுத்தி எல்லாவகை இன்பங்களையம் நுகர்வதற்கான வேட்டைக்காடு. அதிகார வலிமையால் பிறரை அடக்கி ஒடுக்கி அவர்கள் மீது குதிரை ஏறும் ஒரு மகிழ்ச்சி விளையாட்டு.

அரசியலுக்கு வருபவர்களுக்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லை. புறத்தகுதியும் தேவையில்லை அகத்தகுதியும் தேவையில்லை. எந்தக் காட்டானும் வரலாம். எந்தக் கழுதையும் வரலாம்.

வலிமையும் செல்வாக்கு மிருந்தால் அடாவடித் தனமும் எத்துவேலையும் தெரிந்தால் எவன் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் வெற்றி பெறலாம். ஆட்சியிடத்தில் அமர்ந்து கொள்ளலாம். நினைத்தபடி ஆட்டம் போடலாம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கலாம். சொந்த மண்ணையே விற்றுத்தின்னலாம். இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்? பொருள் ஈட்டுதலே குறிக்கோள். அதற்கு என்ன தவறும் செய்யலாம். தண்டனை கிடையாது என்று ஆகிவிடும்பொழுது யார்தான் என்னதான் செய்ய மாட்டார்கள்?

மேலும் படிக்க